Friday 12 July 2013

Story-36 இடியாப்பச்சிக்கல் கதைகள்



இடியாப்பச்சிக்கல் கதைகள்

சுரேஷ்
ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை சாத்திவிட்டு வாசலுக்கு வந்து அமர்ந்தான் சுரேஷ். இம்மாதிரி தனிமையை அனுபவித்து எவ்வளவு நாள் ஆகிறது? கல்யாணமாகி நான்கு மாதங்கள்தான். கவிதா கர்ப்பம் என்று காலையில்தான் உறுதி ஆனது. இந்நேரத்தில் கண்காணாத வடநாட்டில் ஏதோ பாடாவதி பிராஞ்சுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் தண்டனையாக வந்திருந்தது. எட்டு ஆண்டுகளாக மாடு மாதிரி எவ்வளவு உழைத்தாலும் நன்றியே இல்லாமல் நடந்துகொள்ளும் எம்.டி. யை கொலைசெய்தால் என்ன? கோயிலில் வரக்கூடாத நினைப்புதான். ஆனால் வந்துவிட்டது.
செல்போன் அடித்தது. ‘sandhiya calling’. “சுரேஷ்! இதுக்குமேலே பொறுத்துக்க முடியாது. ஏதாவது பண்ணு”. சந்தியா சுரேஷின் காதலி. அவனுடைய எம்.டி. ராமமூர்த்தியின் மனைவியும் கூட.

சந்தியா
சுரேஷின் callஐ கட் செய்தாள். “ம்ஹூம். கல்யாணமே பண்ணிக்கிட்டிருக்கக் கூடாது” எப்போதோ நடந்த கல்யாணத்துக்கு இன்று வருத்தப்பட்டாள் சந்தியா. ராமமூர்த்தி நல்லவன்தான். அன்பானவன். நினைத்தே பார்க்கமுடியாத வசதியான வாழ்க்கையை கொடுத்திருக்கிறான். ஆனால் அவனை பார்க்கும்போதெல்லாம் மரவட்டையைப் பார்ப்பதுமாதிரி அருவருப்பாக இருக்கிறது. கட்டாயத்துக்கு அவனோடு குடும்பம் நடத்தி.. ச்சே.. என்ன பிழைப்பு இது? காதலித்தவனை கைபிடிக்க முடியாததைவிட பெரிய அவலம் பெண்ணுக்கு வேறென்ன இருக்க முடியும்?
நர்ஸ் அவள் சிந்தனைகளைக் கலைத்தாள். “பாஸிட்டிவ் வந்திருக்கு சந்தியா. யெஸ் யூ ஆர் பிரெக்ணண்ட். கங்க்ராட்ஸ்”
நொடிக்கு நொடி வெறுத்துக் கொண்டிருக்கும் கணவனின் வாரிசு அவளது வயிற்றில். அவளே கொஞ்சமும் எதிர்பாராத ட்விஸ்ட். முதன்முறையாக ராமமூர்த்தியின் மீது ஏனோ அவளுக்கு காதல் பிறந்தது.

ராமமூர்த்தி
‘அப்பாவாகப் போகிறாய்’ என்று எஸ்.எம்.எஸ். வந்ததிலிருந்தே தரைக்கு மேலே ரெண்டு அடி மேலேயே பறந்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்விலிருந்தான் ராமமூர்த்தி. அடுத்தவாரம் அவளுடைய பிறந்தநாள் வேறு. அசத்திவிட வேண்டும். ஈ.சி.ஆர். ரோடில் இழைத்து இழைத்து ஒரு வீடு கட்டியிருந்தான். அவளுக்கு தெரியாமலேயே அவளுக்காக கட்டியிருந்த இந்த ‘வசந்தமாளிகை’தான் பிறந்தநாள் பரிசு. அவளோடும், பிறக்கப்போகும் குழந்தையோடும் அம்மாளிகையில் வாழப்போகும் வாழ்க்கையை நினைத்தால் இப்போதே கஞ்சா அடித்தது மாதிரி நெஞ்சு படபடக்கிறது. ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ செல்போன் ரிங்டோனியது. சந்தியா. சனியன், இவள் வேறு. “ராமு, நீ அப்பாவாகப் போற”. அப்படியே ஷாக்கானான். காலையில் கவிதாவின் எஸ்.எம்.எஸ் தந்த மொத்த மகிழ்ச்சியும் அலையில் அடித்துக்கொண்டு போனமாதிரி இருந்தது.

கவிதா
“இதுக்காக என்னை குத்தம் சொல்றீயே? அவன் மட்டும் யோக்கியம்னு நெனைச்சியா?” காஃபிஷாப்பில் இருந்தார்கள் கவிதாவும், லதாவும்.
“சத்தம் போட்டு பேசாதடி. எல்லாரும் நம்பளையே பார்க்கிறாங்க” என்றாள் லதா. இவளும், அவளும் ஒண்ணாவதிலிருந்தே இணைபிரியாத் தோழிகள். உடல் இரண்டு. உயிர் ஒன்று என்பது மாதிரி.
“என்னோட மேரேஜ் லைஃப் ஸ்மூத்தா போய்க்கிட்டிருக்கிறது மாதிரிதான் எல்லாரும் நெனைச்சுக்கிட்டிருக்கீங்க. ஆக்சுவலா சுரேஷ் ஒரு சைக்கோ. டிசைன் டிசைனா என்னை கொடுமைப்படுத்தறான். கல்யாணத்துக்கு முன்னாடி சந்தியான்னு ஒருத்தியை லவ் பண்ணியிருக்கான். இன்னும் அந்த அஃபயர் கண்டினியூ ஆகிட்டிருக்கு. இதனாலே பாதிக்கப்பட்ட நானும், அவளோட ஹஸ்பெண்டும் யதேச்சையா சந்திச்சோம். ஒருத்தருக்கு ஒருத்தர் இயல்பா ஈர்த்துக்கிட்டோம். இதுலே என்ன தப்பு?” என்றாள் கவிதா.

லதா
கவிதாவின் துக்கம் இவ்வளவு நாட்களாக தெரியாமல் இருந்ததற்காக கடுமையாக வருந்தினாள் லதா. ‘பாவி மக. அவ்ளோ க்ளோஸா இருக்குற எங்கிட்டேயே மறைச்சுட்டாளே?’
கவிதாவை மகாராணியாய் வளர்த்தார் அவரது தந்தை. நல்ல வேலையில் இருக்கிறான் என்று சுரேஷுக்கு தன் சக்திக்கு மீறி ஆடம்பரமாய் திருமணம் செய்து அனுப்பினார். ஆனால் இந்த படுபாவி சுரேஷ் தாலி கட்டிவிட்டான் என்பதற்காக எவ்வளவு சித்திரவதைகளைதான் அவள் எதிர்கொள்வாள். கவிதாவுக்கு ராமமூர்த்திதான் கரெக்ட். எப்பாடு பட்டாவது இருவரையும் சேர்த்துவிட வேண்டும். குறுக்கிலிருப்பது சுரேஷும், ராமமூர்த்தியின் மனைவி சந்தியாவும்தான். கருமம், இருவருக்கும் கள்ளக்காதல் வேறு. இவர்கள் செத்தொழிந்தாலும் பரவாயில்லை. பூமிக்கு பாரம் குறையும். ரமேஷுக்கு போன் அடித்தாள். லதாவின் காதலன். அதேநேரம் ப்ரொபஷனல் கில்லரும் கூட.

ரமேஷ்
இதுவரை பணத்துக்காகதான் கொலைகளை செய்திருக்கிறான் ரமேஷ். முதன்முறையாக தன்னுடைய காதலிக்காக தனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத இரண்டு பேரை கொல்லவேண்டும். லதா ரொம்ப பிடிவாதமாக இருக்கிறாள். இந்த வேலையை எடுத்துக் கொள்வதில் அவனுக்கு ஒப்புதல் இல்லை. பேசாமல் இந்த வேலையை கிருஷ்ணனிடம் ஒப்படைத்து விட்டால் என்ன?
கிருஷ்ணனை தேவி தியேட்டர் வாசலில் சந்தித்தான். “மச்சான். என்ன ஏதுன்னு கேட்காதே. ரெண்டு ஆட்டை அறுக்கணும். டீடெய்ல்ஸ் இந்த கவர்லே இருக்கு”
“வேற அசைன்மெண்டுக்கு ஒத்துக்கிட்டிருக்கேண்டா. வேணும்னா அதை நீ செஞ்சுடறியா? இதுவும் ரெண்டு ஆடுதான்”. பண்டமாற்று மாதிரி வேலையை மாற்றிக் கொண்டார்கள். கிருஷ்ணன் ஒரு கவரை கொடுத்தான். “உள்ளே போட்டோ, டீடெய்ல்ஸ் எல்லாமிருக்கு”

கிருஷ்ணன்
வெயிலில் பைக் ஓட்டிய களைப்பில் சோர்வாக வந்து சேர்ந்தான் கிருஷ்ணன். ஃபேன் ஸ்விட்சை போட்டான். கரெண்ட் கட். ரமேஷ் கொடுத்த கவரை பிரித்துப் பார்த்தான். இருபத்தைந்து வயது மதிப்புள்ள பெண்ணின் படம். சந்தியா என்று பெயர் எழுதியிருந்தது. அழகாக இருந்தாள். அதனாலென்ன? இதையெல்லாம் பார்த்தா ‘தொழில்’ நடத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்த படத்தை எடுத்தான். சுரேஷ். விழிகள் பிதுங்கி வெளியே விழுந்துவிடுமளவுக்கு அதிர்ச்சி. இவனை போய் ஏன் கொல்லவேண்டும்?
சுரேஷுக்கு போன் அடித்தான். ஸ்விச்ட் ஆஃப். ரமேஷுக்கு முயற்சித்தான். அதுவும் ஸ்விச்ட் ஆஃப்.. ரிங் போய்க்கொண்டே இருந்தது. உடனே செல்வியைப் போய் பார்க்க வேண்டும். தன்னைவிட சுரேஷை நன்றாகப் புரிந்தவள் அவள்தான். செல்வி கிருஷ்ணனுடைய தங்கை. சுரேஷ் அவனுடைய தம்பி.

செல்வி
செல்வி ஒரு பாசமலர். இரண்டு அண்ணன்கள். சிறுவயதிலேயே அம்மாவும், அப்பாவும் விபத்தில் காலமாகி விட்டார்கள். அனாதையாக மூன்று பேரும் நடுத்தெருவில் நின்றபோது, சமூகத்துக்கு அவர்கள் மீது எந்த இரக்கமுமில்லை. அவர்களாகவே வளர்ந்தார்கள். பெரியவன் கிருஷ்ணன் ‘நிழலான’ தொழில்களில் ஈடுபட்டான். சின்னவன் சுரேஷ் ஓரளவுக்குப் படித்து சொல்லிக் கொள்ளும்படியான வேலையில் சேர்ந்தான். கிருஷ்ணனின் சட்டத்துக்குப் புறம்பான வேலைகள் அவனை உறுத்தியது. விட்டுவிட்டு வந்துவிடும்படி சொல்லி, கிருஷ்ணன் கேட்காமல் கடைசியில் செல்வியையும், கிருஷ்ணனையும் விட்டு தனியாக பிரிந்துப் போய்விட்டான்.
அப்படிப்பட்ட சுரேஷை கொல்ல சொல்லி கிருஷ்ணனிடமே இப்போது வேலை வந்திருக்கிறது. கொல்லுமளவுக்கு யாருக்கு சுரேஷ் மீது வன்மம் இருக்கும்? அன்பு மூலமாகதான் சுரேஷை காப்பாற்ற வேண்டும்.

அன்புசெழியன்
அன்புசெழியன் காவல்துறை இன்ஸ்பெக்டர். செல்வியின் காதலன். அடிக்கடி கிருஷ்ணனை கைது செய்ய போகும்போது செல்வியைப் பார்த்து காதலாகி கசிந்துருகி விட்டான். கிரிமினலின் தங்கையாக இருந்தாலும் சேற்றில் மலர்ந்த செந்தாமரை. அவளுடைய அண்ணன் சுரேஷை கொல்ல சொல்லி அசைன்மெண்ட் எடுத்த ரமேஷை பிடித்து உதைத்தால்தான் பின்னணி வெளிவரும்.
கடைசியாக கிருஷ்ணனை சந்தித்த ரமேஷ் எங்குபோனான் என யாருக்குமே தெரியவில்லை. அவன் கொல்ல ஒப்புக்கொண்ட கவிதாவும், ராமமூர்த்தியும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அப்படியிருக்க ரமேஷின் கதி?
திடீரென ஸ்டேஷனுக்குள் நுழைந்த ஒருவன், முதுகில் சுமந்து வந்த பையில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு தலையை எடுத்து டேபிளில் வைத்தான். ரமேஷின் தலை. “எம் பேரு ரவிச்சந்திரன்” என்று அவன் பேசத்தொடங்கினான்

ரவிச்சந்திரன்
லதாவை உயிருக்கு உயிராக காதலித்தான் ரவிச்சந்திரன். காதல் என்றால் அம்பிகாபதி-அமராவதி ரேஞ்சுக்கு தெய்வீகக்காதல். எப்படியும் லதாவை கைபிடித்து விடலாம் என்று ரவி நம்பினான். ஏனெனில் லதாவின் உயிர்த்தோழி கவிதா வேறு யாருமல்ல. ரவியின் சொந்த தங்கைதான். கவிதா சொன்னால் லதா கேட்பாள் என்று அவளிடம் சிபாரிசுக்கு போனான். ஆனால் லதா, ரமேஷ் என்று ஒருவனை காதலிப்பதாக கவிதா சொல்ல, மனசு உடைந்தான். காதல் தோல்வி அவனை கொலைவெறியனாக மாற்றியது. தனக்கு கிடைக்காத லதா ரமேஷுக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைத்தான்.
அவனைக் கொல்ல இது மட்டுமே காரணமில்லை. இன்னொரு காரணம் சித்ரா. இவள் யாரென்றால்?

சித்ரா
ராமமூர்த்தியின் ஆபிஸ் ரிசப்ஷனிஸ்ட் சித்ரா. சுறுசுறுப்பானவள். இவள் இல்லாமல் ஆபிஸே இயங்காது. அலுவலகத்தில் பணிபுரியும் சுறுசுறுப்பான எக்ஸ்க்யூடிவ்வான சுரேஷை ஒருதலையாக காதலித்தாள். ஒருநாள் அவளது ரூமில் தூக்கில் தொங்கினாள். தற்கொலை என்று போலிஸ் கேஸை ஊற்றி மூடினாலும், அது திட்டமிடப்பட்ட கொலை என்று சித்ராவின் அப்பாவுக்கு தோன்றியது. அவர் விசாரித்துப் பார்த்ததில் தேசவிரோதமான அலுவலக ரகசியம் ஒன்று சித்ராவுக்கு தெரிந்ததாகவும், அது போலிஸுக்கு போவதற்கு முன்பாக அவளை கொல்ல கூலிப்படை அமைக்கப்பட்டதாகவும் கண்டுபிடித்தார். அவர் ஒரு வாத்தியார். தன்னுடைய விசுவாசமான முன்னாள் மாணவனிடம் இதை சொல்லி அழுதார். அந்த மாணவன்தான் ரவிச்சந்திரன். சித்ராவை கொன்ற கூலிப்படைத் தலைவன் வேறு யாருமல்ல. ரமேஷ்தான்.

ராகவன்
இதுவரை வந்த எந்த கேரக்டர்களோடும் தொடர்பில்லாத மனிதர். ஆனால் அந்த கேரக்டர்களை உருவாக்கியவரே இவர்தான். மெகாசீரியல் ரைட்டர். தாய்க்குலத்தின் பேராதரவோடு பரபரப்பாக ஓராண்டு காலமாக ஓடிக்கொண்டிருந்த ‘நிர்மலா’ மெகாசீரியலின் சில காட்சிகளைதான் இதுவரை நீங்கள் வாசித்து வந்தீர்கள். இன்னும் ஐந்து எபிசோடுகளோடு சீரியலை முடித்துக் கொள்ளுங்கள் என்று சேனல் உத்தரவிட்டு விட்டது.
இன்னும் ரெண்டு, மூன்று ஆண்டுகளுக்கு இழுக்கலாம் என்று ஏராளமான பாத்திரங்களை உருவாக்கி, அப்பாத்திரங்களுக்குள் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல் முரண்களை ஏற்படுத்திவிட்டு சக்கரவியூகத்துக்குள் மாட்டிக்கொண்ட அபிமன்யூவாய் அவதிப்படுகிறார் ராகவன். எங்கே முடி போட்டோம், அதை எப்படி ஐந்து எபிசோடில் அவிழ்ப்பது என்று புரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார். உங்களால் முடிந்தால் இக்கதையை எப்படி முடிப்பது என்று அவருக்கு ஆலோசனை சொல்லி உதவுங்கள்.

No comments:

Post a Comment