Tuesday 30 July 2013

Story-77 இப்படிக்கு நான்

இப்படிக்கு நான்...
நிலா இன்னைக்கு என்னைய அவமானப்படுத்திட்டா.அவளுக்காகவாது நான் நல்ல கதையா எழுதி முதல்பரிசு வாங்குறேனா இல்லையான்னு மட்டும் பாருங்க.இதோ 1௦ரூபாய்க்கு பேப்பர்,பென்சில்,ரப்பர் எல்லாம் வாங்கிவச்சிட்டேன்.பெரியபெரிய எழுத்தாளர்கள் எல்லாம் பென்சிலில் தான் கதை எழுதுவாங்கலாமே!.வச்சி எழுத அந்த டெண்டுல்கர் படம்போட்ட ஒட்டியிருந்த நோட்டை தேடி எடுக்கணும்,அந்த மூணாவது அலமாரியில தான் இருக்கும்.நான் பத்தாவது படிக்கும்போது வாங்கினது எவ்வளவு ராசியானது தெரியுமா..!
பேப்பர்,பென்சில் எல்லாம் வாங்கி நான் கதை எழுத ரெடி ஆகிட்டேன்னு நிலாகிட்ட சொன்னா,நீ இப்படியெல்லாம் எடுத்துவைப்ப வழக்கம்போல பண்ணமாட்டேன்ன்னு சொல்றா.நீங்க ஏன் அப்படி பாக்குறிங்க,எதோ போன இரண்டு தடவை விட்டுருக்கலாம் ஆனா இந்த முறை விடுறதா இல்லை.இன்னைக்கு நைட் எழுதுறேனா இல்லையான்னு மட்டும்பாருன்னு சொன்னா அதுக்கு எதுக்கு காலையிலயே ஆபீஸ்க்கு லீவு போட்டன்னு கேக்குறா.ஆமா லீவு போட்டேன்.நைட் என்ன எழுதன்னு இப்பவே யோசிக்கவேண்டாமா,அதுக்குத் தான்.இதெல்லாம் பரவாயில்ல நான் ஸ்கூல் படிக்கும்போது கவிதை போட்டியில பரிசு வாங்கியிருக்கேன்னு சொன்னா,எந்த கடையிலன்னு கேக்குறா.கிண்டலா சிரிக்கிறா பாருங்க கண்ணா பெருசாக்கி நாலு பல்லு மட்டும் தெரியுற மாதிரி நாக்கை வெளிய நீட்டி,அழகாதான் இருக்கு.அதுக்குன்னு அப்படியா சிரிக்கிறது.பொண்ணுங்களே இப்படிதான்.எனக்கு அவளைப் பிடிக்கும்ன்னு தெரிஞ்சிக்கிட்டு எவ்வளவு அநியாயம் பண்றா.
இதுல நீ ஒழுங்கா கதை எழுதி முடிச்சிட்டா உன்னை எம்.ஜி.எம்.க்கு கூட்டிட்டுபோறேன்னு சொல்றா,நான் என்ன குழந்தையா சொல்லுங்க.இவ கிண்டல் பண்றது பத்தாதுன்னு சுபா வேற கூட சேர்ந்துக்கிறா.இவரா கதை எழுத போறாரு தமிழ்ல பத்துவரி தப்பில்லாம ஒழுங்கா எழுதச்சொல்லு பார்ப்போம்ன்னு சொல்றா.நான் பத்தாவதுல தமிழ்ல 9௦மார்க் தெரியுமா! எங்க அந்த சர்டிபிகேட்.ஓ அதுவா! ஒருநாள் நானும் ரவியும் எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ்ல பதியபோறோம்ன்னு சொல்லிட்டு சாந்தி தியேட்டர்ல படையப்பா படத்துக்கு போனோமா படம் சூப்பர்தான் ஆனா பேக் தொலைந்துபோச்சு.பேக்கோட சர்டிபிகேட்டும்.அது மட்டும் இருந்திருந்தா இவங்க ரெண்டு பேரு மூஞ்சிலயும் வீசி எறிஞ்சிருப்பேன்.சுபா மூஞ்சி வதக்குன கத்திரிக்காய் மாதிரி ஆகியிருக்கும்.சொல்ல மறந்துட்டேனே இந்த வதக்குன கத்திரிக்காய்ல நெய்யை ஊத்தி.அடச்சீ ஏதேதோ பேசிட்டு இருக்கேன்ல.ஆனா இன்னைக்கு கதை எழுதறேனா இல்லையான்னு மட்டும் பாருங்க.மொதல்லபோய் பக்கத்து வீட்ல டிவி சத்தத்தை குறைக்க சொல்லணும் வேணாம் அந்த மனுஷனே பெண்டாட்டி திட்டுறது கேட்க கூடாதுன்னு இவ்வளவு சத்தம் வச்சிருக்காரு.பேசாம ரூம்ல போய் கதவை தாழ்ப்பாள் போற்றுவோம்,அமைதியா இருந்தாலே ஆயிரம் கதை எழுதலாம்.டேபிள்ல ஃபைல் எல்லாம் இப்படி கலைந்துகிடக்கு,அங்க மாட்டியிருக்க சிவப்பு சட்டை துவைக்கல போல இங்கவரை நாற்றம் அடிக்கிது,ரூம் ஃபுல்லா இவ்வளவு குப்பை கிடக்கு,அதோ என் ஜட்டி வேற குப்பைத்தொட்டியில கிடக்கு என்ன நினைச்சிட்டு இருக்கா அவ.கூப்பிட்டு திட்டனும்,வேணாம் அவ அடிப்பா.ஜட்டியை எதுக்கு குப்பைத்தொட்டியில போட்டனாவது கேட்கணும்.
ஐ...ஐடியா ஒரு க்ரைம் ஸ்டோரி டைட்டில் ‘குப்பைத்தொட்டியில் கருப்புஜட்டி’.சீ வேணாம் எதுக்கு க்ரைம் ஸ்டோரி ஒரு லவ் ஸ்டோரி எழுதுவோம்.எதிர்த்த வீட்டு கணேஷ் இருக்கான்ல,அதாங்க கண்ணாடி போட்டுக்கிட்டு குட்டையா இருப்பான்ல அவனும் ஜனனி மளிகை ஓனர் பொண்ணும் லவ் பண்ணி ஓடிப்போனதை வச்சி ஒரு மெகாசீரியலே எழுதலாம்.எதுக்கு வேற எவனோட கதை என்னோட கதையே எழுதலாமே காலேஜ் படிக்கும்போது நானும் அந்த ரெட்டஜடை நளினியும் ஐய்யயோ அவளுக்கு தெரிஞ்சா நான் செத்தேன்.ஹ்ம்ம் இப்ப புடிச்சிட்டேன் பாருங்க.ஹீரோ ஒரு பாய்கிட்ட வளருறான்.பாய் கடத்தல்தொழில் பண்றார்.ஒரு பிரச்சனையில போலீஸ் பாயை கொன்னுட,அந்த போலீஸை நம்ப ஹீரோ கொன்னுடுறான்.நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவும் தப்பில்லைன்னு சொல்லி அப்படியே கொஞ்ச நாளுல பெரியாளாகிடுறான்.இந்த நேரத்துல போலீஸும் அவனைத் தேட ஆரம்பிக்க கடைசியில ஹீரோவே கோர்டுக்கு போகும்போது டுவிஸ்ட் பாருங்க ஹீரோ சின்ன வயசுல கொன்னாருபாருங்க அந்த போலீஸோட பையன் ஹீரோவைக் கொன்னுடுறான்.சூப்பர்ல.ஆனா எங்கேயோ கேட்டமாதிரி இருக்கோ,எனக்கும் அப்படித்தான் இருக்கு.அட.!சாரிங்க நேத்து நைட் நாயகன் படம் பார்த்த எஃபக்ட் இன்னும் போகல.


மாடியில இருக்க கோமதி பாட்டிக்கிட்டபோய் கதைகேட்கலாமா,வேணாம் அவங்க ராமாயணத்தையும் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்ட அவங்களோட புருஷன் பத்தியும் பேச ஆரம்பிச்சிடுவாங்க.சுபாக்கிட்ட கேட்கலாம்,சமைக்கும்போது அவக்கிட்டபோய் பேசுனா காய்கறி நறுக்க சொல்லிடுவா.அட! நான் எந்த கதையைத்தான் எழுதுவேன்.இன்னைக்கும் கதை எழுதலைனா ஸ்கூலுக்கு போயிட்டுவந்து நிலா என்னைய திட்டி தீர்த்துடுவா.ரெண்டு வருஷம் எழுதித்தரேன் எழுதித்தரேன்னு சொல்லி ஏமாத்திட்டேன்.ஆனா இந்த முறை தப்பிக்கமுடியாதுபோல.படிக்கிற புள்ளைகளுக்கு போட்டிவைக்காம அவங்க அப்பாக்கெல்லாம் போட்டி வைக்க எவன்டா கண்டுபிடிச்சது.அந்த தொத்தபல் ஹேமா எல்லாம் கிண்டல்பண்றாப்பா இந்த முறையாவது எழுதிடுவியா?,அவ சொன்னது மனசுக்குள்ளயே இன்னும் கேட்குது,இல்ல,என் பொண்ண நான் தோற்கவிடமாட்டேன்.நீங்க வேணாம் பாருங்க அவ வர்றதுக்குள்ள கதை எழுதுறேனா இல்லையான்னு .

No comments:

Post a Comment