Monday 15 July 2013

Story-41 நாய்குட்டி மனசு



நாய்க்குட்டி மனசு

குழந்தையாய் இருந்த போது எல்லோரும் அழுதிருக்க வேண்டும்,நானும் அப்படிதான் இருந்திருப்பேன்  . ஆனால் விவரம் தெரிந்த நாளில் இருந்து நான் அழுததில்லை . எனக்கு அழுகை வந்ததில்லை . எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன . சித்தப்பா தற்கொலை செய்து கொண்டது , சுந்தரி அத்தைக்கு விபத்தில் ஒரு கால் போனது , பக்கத்துக்கு வீட்டு கணேசுக்கு மஞ்சக்கா மாலை வந்து செத்து போனது என்று நிறைய சம்பவங்கள் என் முன்னாடியே நடந்துள்ளது. இவைகள் எல்லாம் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தின ஆனாலும் ஏனோ அழுததில்லை . என் தந்தை வெளிநாடு சென்ற போது கூட என் தங்கையும் அம்மாவும் விசும்பி கொண்டே நின்றார்கள் , எனக்கும் என் அப்பாவை அவ்வளவு பிடிக்கும் ஆனாலும் எனக்கு அந்த நாளில் கூட அழுகை வரவில்லை . பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னோடு படித்து வந்த ரஞ்சனி  ஊர் மாறி சென்ற போது சில நாட்கள் பித்து பிடித்தது போல் இருந்தேன் ஆனாலும் அழுகை வந்ததில்லை . என் அம்மாவோ தங்கையோ அப்படியில்லை , டிவி பார்த்துகொண்டிருக்கு போது கூட கண் கலங்கி விடுவார்கள் . அதை நான் பார்த்து விட்டால் கிண்டல் செய்வேன் . ஒரு நாள் ரஜினியின் அண்ணாமலை ஓடி கொண்டிருந்தது. அம்மா புடவை தலைப்பை எடுத்து கண்களை துடைத்து கொண்டதை கவனித்தேன்.
“அம்மா... போதும்மா ..நூறு தடவ போட்டுட்டான் , ஆனா நூறு தடவையும் எப்படிம்மா உனக்கு அழுகை வருது .. அந்த ரிமோட்டை இங்கே தள்ளி விடும்மா ”
“ஆமாண்ட .. என்ன பண்ணுறது ..உனக்குத்தான் கல்லா படைச்சுட்டான். எங்களுக்கு ஈர மனசு, நீ வீட்டுல இருந்தாலே டிவிய ஒழுங்கா பாக்க விட மாட்டியே ..”
அதற்குள் என் தங்கை சுமதியும் அம்மாவோடு சேர்ந்துக்கொண்டாள்
ஆமாம்மா ..ஒரு படத்தை கூட ஒழுங்கா பாக்க விடமாட்டான் .இங்கே கொடும்மா “ என்று ரிமோட்டை வாங்கி அவள் கையில் வைத்துக்கொண்டாள். இனி அவளிடமிருந்து ரிமோட்டை வாங்க முடியாது என்று தெரியும்.  
“சரி சரி ..ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டி புடுச்சி ஒப்பாரி வைங்க, நான் வரேன் “. 
நான் எழுந்து கடைதெருவை  நோக்கி நடக்க ஆரம்பித்தேன் . எங்கள் வீட்டு நாய் ஜிம்மி என் கூடவே ஓடிவர ஆரம்பித்தது . லேசாக ஒரு கலை மட்டும் விந்தி விந்தி நடக்கும் . 
 “போ வீட்லய இரு ..எங்க பின்னாடியே வர்ற” என்று அதட்டிய உடனே ஓடி போய் படுத்து கொண்டது . நான் திட்டுவதையும் கொஞ்சுவதையும் நன்றாக புரிந்து கொள்ளும் . ஒரு முறை பள்ளிகூடத்திலிருந்து திரும்பும் போது ரயில் ரோட்டு ஓரமாய் நின்றது என்று தூக்கி கொண்டு  வந்து விட்டாள் சுமதி .
அம்மா, “பொட்டகுட்டிய போய் தூக்கிக்கிட்டு வந்திருக்கா பாரு”  என்று அவளை திட்டி விட்டு கொண்டு போய் அங்கேயே விட்டு விட்டு வர சொன்னாள் . நானும் அம்மா  சொன்னதை ஆமோதித்தேன். ஆனால் சுமதி கொண்டு போய்விடவில்லை,  “நான் பார்த்துகிறம்மா” , “நான் பார்த்துகிறம்மா”  என்று தட்டி கழித்து விட்டாள் . அவளுடைய அடம் பற்றி அம்மாவுக்கு தெரியும் . ரெண்டு மூணு தடவ சொல்லி பார்த்துட்டு விட்டுட்டு வேற வேலை பார்க்க ஆரம்பித்தாள் . சுமதி அதை வீட்டுக்கு தூக்கி வரும் போதே பேரும் வைத்து விட்டாள் .
“டேய் ரவி ..வரும் போது ஜிம்மிக்கு பிஸ்கட் வாங்கி வாடா ..” , சுமதி
“சரி வாங்கி வர்ரேன்” என்று நான் சொன்னேன்
“ஆமா அது ஒன்னு தான் குறைச்சல், நாளைக்கே அத கொண்ட விட்டுட்டு வந்துடு” என்றாள் அம்மா . 
அம்மாவும் ரெண்டு மூணு நாளைக்கு அப்புறம் அந்த நாய்க்குட்டி பற்றி திட்டுவதை விட்டு விட்டாள் . ஒருவேளை அவளுக்கும் பிடித்து விட்டது போல என்று நினைத்துக் கொண்டேன் . எப்படியோ இன்று ஜிம்மி வளர்ந்து விட்டது. எங்கே போனாலும் கொஞ்ச தூரம் பின்னாடியே வரும். சத்தம் போட்டால் திரும்ப ஒடி போய் படுத்துக் கொள்ளும். ஆனால் அது விந்தி விந்தி நடக்கும் போதெல்லாம் எனக்கு மனசு என்னோவோ போல் இருக்கும், ஏன்ன அதுக்கு காரணமே நான் தான் .
ஜிம்மி வந்த ஒரு சில நாளிலேயே என்னோடும் விளையாட ஆரம்பித்தது . நானும் அதை எடுத்து கொஞ்சுவது, துரத்துவது என்று விளையாட ஆரம்பித்தேன் . ஆனால் சுமதி வீட்டில் இருந்தால் என்னை தொட விட மாட்டாள் .அவளே வைத்திருப்பாள் . எப்படியோ மூன்று நாளிலேயே எனக்கும் ஜிம்மிய பிடித்து விட்டது . அம்மாவுக்கும் பிடித்து விட்டது என்று நான் நினைத்து தவறு என்று அடுத்த நாளே தெரிந்தது .
“டே தம்பி, சுமதி வர லேட்டாவும், டுயுசன் போயிட்டு வர ஏழு மணியாயிடும். அவ வரதுக்குள்ள நீ இந்த நாய்க்குட்டிய எடுத்து கொண்ட எங்காவது போட்டுட்டு வந்துடு “
காலேஜிலிருந்து வந்த உடனே அம்மா என்னை கூப்பிட்டு சொன்னாள் .
“இல்லம்மா ..அது இருந்துட்டு போகட்டுமே..சுமதிக்கும் ரொம்ப பிடிச்சு போய்ட்டு”  என்று மழுப்பினேன் . எனக்கும் பிடித்திருகிறது என்று சொல்ல வாய்வரை வருகிறது ஆனால் சொல்லவில்லை.
ஆனால் அம்மா கேட்பதாய் இல்லை , “ அவதான் சின்ன புள்ள, நீயும் அவளுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு ... சீய்கிரம் போய் எங்காவது தூரத்துல கொண்டு விட்டுட்டு வா ..இல்லாட்டி திரும்பி வந்திட போகுது ”  சொல்லி விட்டு சமையலில் மும்முரமானாள்.
நான் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை ,பேசினாலும் எடுபடாது என்று தெரியும் . ஒரு துணி பையில் ஜிம்மிய போட்டு எடுத்துகொண்டு பேசாமல் சைக்கிளை எடுத்து கொண்டு புறப்பட்டேன் அரை மனதுடன்  .

எங்கே விடுவது யோசித்து கொண்டே போய்க்கொண்டிருந்தேன். ஆத்துப்படுகையை தாண்டி சின்ன காடு உள்ளது , ஒரே கருவ காடு புதருமா புல்லுமா கிடக்கும் . சாயங்கலாம் ஆனா யாரும் அந்த பக்கம் போக மாட்டானுங்க ,கீரிபுள்ள நிறைய கிடக்கும் , நரி கூட கிடக்குமுனு சொல்லுவாங்க .அந்த பக்கம் நெறைய நாயுங்க கூட நிக்கும் . உடும்பு பிடிக்க பசங்களோட உள்ள போறது . அதுக்குள்ளேயும் சில பேரு சீட்டு விளையாடுவானுங்க . எனக்கு அந்த இடத்தில விட்டுவிடலாமுன்னு யோசனை தோன்றியது . அதே மாதிரி அங்கேயே விட்டு விட்டு சைக்கிளை எடுத்து கொண்டு புறப்பட்டேன் .     
மனசு ஒரு மாதிரி இருந்தது, நேரே வீட்டுக்கு வராமல் கடை தெருவுக்கு போனேன் . ஜிம்மி விட்டுட்டு வந்த அப்புறம் தான் தெரிந்தது , நான் எந்த அளவுக்கு ஜிம்மி மேல் பாசம வச்சிருந்தேன் அப்படின்னு. மனசு முழுசும் அதே நினைப்பா இருந்துச்சு , ஒரே சஞ்சலமா வேற இருக்கு பேசமா போய் தூக்கிட்டு வந்திடலாமா என்று யோசித்தேன். இப்போதே நல்லா இருட்டிருச்சு . பேசிகிட்டு இருக்கும் போதே நண்பர்கள் ஒருத்தன் மாத்தி ஒருத்தன் ஏண்டா ஒரு மாதிரி இருக்கே என்று கேட்டார்கள் . அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை .சொன்னால் கிண்டல்தான் பண்ணுவாய்ங்க என்று தெரியும் . ஒரு வழியாய் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டது .

வீட்டிற்கு வரும் போதே கவனித்தேன் ,சுமதி போர்த்தி கொண்டு படுத்திருந்தாள் . நான் அம்மாவிடம் என்னமா சுமதி சீக்கிரம் படுத்துட்டா போல என்றேன் . அவ்வளுவுதான் சுமதி சடக்கென்று எழுந்து உர்க்கார்ந்தாள்
“டே ஜிம்மி இல்லாம வீட்டுக்குள்ள வராதே ..” சொல்லிவிட்டு  தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“ஆமாண்ட வந்ததிலேருந்து அழுதுகிட்டு சாப்பிடமா கூட படுத்துட்டா,அவள சமாதான படுத்த முடியாது போலட ..பேசாம அந்த நாய்க்குட்டிய திரும்ப கொண்டாந்து கொடுத்துடலாம்டா ..” அம்மா சொன்னதும் எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. சுமதி இன்னும் விசும்பி கொண்டிருந்தாள் .
“ஆமா எங்கே கொண்டு விட்ட ?” - அம்மா
“ஆத்துக்கு பக்கத்துல இருக்கிற காட்டுல “ -நான்
“ஏண்டா அறிவிருக்கா காட்டுல கொண்ட விட்ட எப்படிடா , எங்காவது வீடு இருக்கிற பக்கமா விட்ட தானட யாரவது எடுத்து போவாங்க.. காட்டுல விட்ட இந்நேரம் நரி கிரி தின்னுருக்க போகுதுடா – அம்மா சொல்லி முடிப்பதற்குள் சுமதி பெரிதாக அழ ஆரம்பித்தாள் . எனக்கு பகீரென்றது , எப்படி இத நான் யோசிக்கவே இல்ல . இருந்த மனக்குழப்பத்தில் காட்டுல கொண்ட விட்டுவிட்டு வந்துடேனே . எவ்வளுவு பெரிய முட்டாள் தனம் செய்து விட்டேன் . இப்போதோ ரொம்ப நேரம் ஆகிவிட்டது , பகலில் கூட அந்த பக்கம் யாரும் போக பயபடுவானுங்க .இந்த நேரத்தில் எப்படி போறது . மனசு கடந்து அடித்துக்கொண்டது . கடவுளை வேண்ட ஆரம்பித்தேன், ஜிம்மிக்கு ஒன்றும் ஆகிவிட கூடாது . ஆனாலும் இப்போவே போய் பார்த்திடலாமுனு கிளம்பினேன் . அம்மா தடுத்துவிட்டாள் .
அம்மா ஒரு பக்கம் சுமதியை சமாதானம் செய்தாள், ஆனால் அவள் கேட்பதாய் இல்லை அழுது கொண்டே இருந்தாள் . அம்மா என்னிடம் ‘சரி சரி காலையில மொத வேலையாய் போய் தூக்கிகிட்டு வந்திடலாம் , அதுக்கு ஒன்னும் ஆயிருக்காது “   என்றாள் .
“ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு படுங்க” – அம்மா
“எனக்கு தான் வேண்டான்கிறேன்ல” – விசும்பி கொண்டே சுமதி சொன்னாள் . அவள் குரலில் கோபம கொப்பளித்தது.
“எனக்கும் வேண்டாம்மா” -  நான் சொன்னவுடன் அம்மாவும் திரும்ப  எதுவும் பேசாமல், சோற்றில் தண்ணி ஊற்றி வைத்து விட்டு அவளும் சாப்பிடாமல் சுமதிக்கு பக்கத்தில் படுத்துக்கொண்டாள்.  
கொஞ்ச நேரம் சுமதி விசும்பி கொண்டே இருந்தாள்  அப்புறம் நின்று விட்டது ,எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை . அம்மாவும் தூங்கி போயிருந்தாள் . நான் மட்டும் எப்போது விடியும் எப்போது போய் ஜிம்மிய தூக்கி கொண்டு வரலாமுனு அங்கட்டும் இங்கட்டும் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தேன். எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டே இருந்தேன் . ஜிம்மிக்கு எதுவும் ஆகிட கூடாது . என் முட்டாள் தனத்தை நினைத்தால் எனக்கே என் மேல் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது .

மணி நாலரை கூட ஆகி இருக்காது ,அம்மாவும் சுமதியும் தூங்கி கொண்டு இருந்தார்கள் . நான் பாட்டரி லைட்ட எடுத்துகிட்டு சைக்கிளை எடுத்துகிட்டு புறப்பட்டேன் . மீன் பிடிக்க போற ஒன்னு ரெண்டு பேரு அந்த பக்கம் நடமாட்டம் இருந்தது , கொஞ்சம் பயம் போக வேகமா போக ஆரம்பிச்சேன் . வழி பூரா ஜிம்மிகாக வேண்டிகிட்டே போனேன் .

எனக்கு நெஞ்சே அடைக்கும் போல இருந்தது , இங்கே தானே விட்டுவிட்டு போனோம். இப்ப காணோமே. சுத்தியும் தேடினேன் . ஏற்கனவே கொஞ்சம் வெளிச்சம் பரவ ஆரம்பிச்சதால நல்லா பாக்க முடிஞ்சது . எங்கேயும் காணோம் .  எதோதோ பிதற்றிக்கொண்டு கடவுளை திட்டி கொண்டு அங்கும் இங்கும் தேட ஆரம்பித்தேன். என் முட்டாள் தனத்தை நினைத்தால் கோபமாய் வந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அம்மா சொன்னது போல நரி தின்றிருக்குமா நினைக்கும் போதே தொண்டை குழி அடைத்து கொண்டது. எதோ ஆயிருக்கும் போல, நினைக்கும் போதே கண்களில் கடகட வென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. முதன் முதலாக எனக்கே தெரியாமல் அழ ஆரம்பித்தேன்.     
இனி கிடைக்காது என்று முடிவாக தெரிந்தது , கண்களில் பொல பொல என்று கொட்டிக்கொண்டே இருந்தது ,வழிந்த கண்ணீரை நான்  துடைத்து கொள்ள கூட இல்லை. சைக்கிளை தள்ளி கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். கொஞ்ச தூரம் நடந்த போது அந்த சத்தம் கேட்டது . நாய்க்குட்டியின் முனகல் தான் ,என் ஜிம்மி தான் . அந்த மரத்துக்கு பின்னால் இருந்து தான் சத்தம் வருகிறது . அப்படியே சைக்கிளை போட்டு விட்டு ஓடினேன் .

ஓடி போய் பார்த்த போது சறகுகளுக்குள் ஒண்டி கொண்டு ,நடு நடுங்கி கொண்டு முனகி கொண்டு கிடந்தது , உடம்பு முழுவது ரத்தம் வழிந்து கொண்டிருந்தது . அப்படியே அள்ளி அனைத்து கொண்டேன் , அழுது கொண்டே மன்னிப்பு கேட்டேன் , இனி உன்னை விட்டு பிரியமாட்டேன் எவ்வளவு பெரிய முட்டாள் தனம் செய்து விட்டேன் . அது காலில் எதுவோ கடித்திருக்கிறது. எப்படியோ தப்பி ஓடி வந்து இங்கே ஒளிந்திருக்கு. வீடு வரும் வரை அழுது கொண்டே தான் வந்தேன் . நான் அழுததை ஜிம்மி மட்டும் தான் பார்த்தது .

நாட்கள் ஓடியது ,அதற்கு பிறகு பால் ,சோறு என்று கூடுதலாகவே கவனிக்க ஆரம்பித்தேன்.  அதுவும் என்னையும் சுமதியையும் சுற்றி சுற்றி வரும்.  இப்போதும் அது விந்தி விந்தி நடப்பது எனக்கு உறுத்தலாகவே இருக்கும் .

என் அம்மா இன்னமும் சொல்லிக்கொண்டிருப்பாள், அவன் கல்நெஞ்சக்காரன் எதுக்கும் அசங்க மாட்டான்னு . ஆமாம் நான் அழுததை ஜிம்மி மட்டும் தானே பார்த்துள்ளது .

1 comment: