Friday 26 July 2013

Story-66 நீண்ட இரவு



நீண்ட இரவு

"மாமா...அவன் பார்த்துருக்க மாட்டான்ல?" - மெல்லிய விசும்பலுக்கிடையே என் மனைவி இந்த கேள்வியை ஆறாவது முறையாக என்னிடம் கேட்டாள்.

சற்று நேரத்திற்கு முன்பு வரை,"இல்லை மாமா..அவன் பார்த்தான். நான் கவனிச்சேன்.." என்று ஐம்பது முறைக்கும் மேல் சொல்லியிருந்தாள்.

இரவு மெதுவாக, மிக மிக மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. நாங்கள் அமர்ந்திருந்த பால்கனியில் இருந்து முழுநிலவு தெளிவாக தெரிந்தது. இரவு ஒரு மணிக்கு இங்கே இப்படி ஒரு சம்பாஷனை எனக்கும் என் மனைவி மலருக்கும் இடையில் நடக்கும் என்பதை ஏற்கனவே நான் அறிந்தவன் என்கிற தோரணையில் நிலவு எங்களை நேராய்ப் பார்த்துக்கொண்டிருப்பதாய்ப் பட்டது எனக்கு. ஆனால் காற்று எங்களுக்கு ஆறுதல் சொல்ல முற்பட்டு தென்றலை வஞ்சனையில்லாமல் அனுப்பிக்கொண்டிருந்தது.

பன்னிரண்டு மணிக்கு முன்பு வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. சொல்லப்போனால் என்றும் போல  சந்தோசமாகத்தான் இன்றைய இரவையும்  கழித்துக்கொண்டிருந்தோம். திருமணமான இந்த ஒன்பது மாதங்களில் தனிக்குடித்தனம் வந்து எட்டு மாதங்கள் ஆகின்றன. ஆந்திராவின் கடப்பா நகரில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தில் மெயிண்டனன்ஸ் துறையில் பணிபுரியும் நான், பிறந்ததிலிருந்து ஒரு அண்ணன், ஒரு தம்பி, ஒரு தங்கை சகிதம் கலகலவென இருந்த என் மனைவியை இங்கே தனியாக இருக்கவைப்பதில் இருக்கும் சிரமங்களை உணர்ந்தே இருந்தேன். அதனால் என்னால் முடிந்த அளவு அவளுடன் என் நேரந்த்தை செலவளித்தேன்.

சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் சிறிதுநேரம் அன்றைய கதைகளை பேசுவது, பின்னர் அவள் ஆசைப்படுகிறாலோ இல்லையோ குறைந்தபட்சம் அருகிலுள்ள பூங்காவிர்காவது தினமும் அவளை அழைத்து செல்வது, வாரத்திற்கு ஒரு தெலுங்கு சினிமா அல்லது பெரிய உணவகம் ஒன்றில் சாப்பாடு, வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் கலவி  என சராசரி மனைவியின் விருப்பங்கள் என இந்தியாவில் வைக்கப்படும் கோட்பாடுகளுக்கு கொஞ்சமும் மிகாமல்  வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு இன்றைய பிரச்சினையும் அதற்கு என் மனைவி கொடுத்த எதிர்வினையும் சற்றும் எதிர்பாராதவை.

என் மனைவியின் தம்பி சென்ற வாரம்தான் இங்கே எங்கள் வீட்டிற்கு வந்தான். டிப்ளமோ முடித்திருக்கிறான். தேர்வு முடிவிற்காக காத்திருந்த தருணத்தில் நான் அவனை இங்கே வரச்சொன்னேன். அருகிலேயே ஏதேனும் வேலை கிடைத்தால் என் மனைவிக்கும் சந்தோசமாக இருக்கும் என்கிற எண்ணமும் சேர்ந்துகொண்டது. நேற்றுவரை அவன் வரவு சந்தோசமாகவே இருந்தது. இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு  ஊர் சுற்றும் அளவிற்கு அதை கொண்டாடினோம் நானும் என் மனைவியும். இன்று அவனேதான் பிரச்சினையின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறான்.

வீடு நடுத்தரமானதுதான். முதல் மாடியில் உள்ளே நுழைந்ததும் ஒரு ஹால். வலது  மூலையில் சமையலறை. இடது ஓரத்தில் சற்று உள்நோக்கி இருக்கிறது இப்போது நாங்கள் இருக்கும் பால்கனி. ஹாலின் ஒரு ஓரச் சுவரின் மையப்பகுதியில் இருக்கிறது படுக்கையறை. அவன் வந்த நாள் முதலே அவன் தனியாக, நாங்கள் இருவரும் தனியாக என தூங்கவில்லை. அது அவனுக்கு ஒருவித அசவுகரியத்தைக் கொடுக்கக்கூடும் என்பதாலும், படுக்கையறையில் கட்டிலெல்லாம் இல்லாமல் மெத்தையை கீழே விரித்துதான் நாங்கள் தூங்குவோம் என்பதால் இடமில்லை என்கிற காரணம் அடிபட்டுபோவதாலும், மேலும் அவன் வீட்டில் குடும்பத்தோடு ஒன்றாய் தூங்கியே பழக்கப்பட்டவன் என்பதாலும் அவனும் எங்கள் படுக்கையறையிலே தூங்கினான். தொலைக்காட்சியும் எங்கள் படுக்கையறையில்தான் இருந்தது என்பதும் ஒரு காரணம்.

முதல் இரண்டு மூன்று நாட்கள் சமாளித்துவிட்டேன். நான்காம் நாள் முடியவில்லை. வேண்டுமென்றே ஆங்கில தொலைகாட்சி ஒன்றில் போட்ட ஆக்ஷன் படம் ஒன்றை ஒரு மணி வரை விழித்துப் பார்த்தேன். என்னவள்  ஆழ்ந்து உறங்கிவிட்டாள். பின் மெல்ல அவளை எழுப்பி இதோ இதே பால்கனியில் வைத்து வேர்க்க விறுவிறுக்க கலவி கொண்டதை இந்நேரத்தில் நினைத்துப்பார்க்கையில்,"மடையா! அதையே இன்றும் செய்திருக்கலாமே!!" என்று உள்ளுக்குள் தோன்றியதை இப்போது வெளியில் சொல்ல இயலாது.

அவன் வழக்கமாக பதினோரு மணியிலிருந்து பதினொன்றை மணிக்குள் தூங்கிவிடுவது இந்த நான்கு நாட்களுக்குள் தெரிந்துவிட்டிருந்தது. அதேபோல் இன்றும் அவன் உறங்கிக்கொண்டிருந்தான். நீல நிற இரவு விளக்கின் சோகையான வெளிச்சத்தில் சுவர் கடிகாரம் பன்னிரெண்டை காட்டியது. என்னவள் சிவப்பு நிற இரவு உடையில் அருகில் படுத்துக்கொண்டு மெல்லிய ஒலியில் ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியில் குஷி படத்தின் அந்த புகழ்பெற்ற பாடலை பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் பார்வை அவளைத்தாக்க மெல்ல என்னை நோக்கி முழுதும் திரும்பினாள்.

"தூங்கலையா?" -ரகசியக் குரலில் கேட்டேன்.

இல்லை என்பதைப்போல தலையாட்டினாள்.என் கைவிரல்கள் சுதந்திரமாய் அவள் உடலில் பரவத்தொடங்க அவள் தட்டிவிட்டாள். "தம்பி.." என்றாள். "தூங்குறான்" என்று சைகையில் கூறினேன். "வெளிய.." என்று கைகாட்டினாள். "தடவுறதுக்குக்கூட வெளியவா?" என்றேன்.

மெல்ல சினுங்கிகொண்டே என் கைகளை அனுமதித்தாள். காமம் அங்கே கேள்விகள் எதுவுமின்றி, சுங்க வரி இம்சையின்றி ஒரு ஆணும் பெண்ணும் அருகருகே இருக்கிறார்கள்...அவர்களை சந்தோசப்படுத்து என்கிற கட்டளைக்கேற்ப உள்ளுக்குள் ஊடுருவ ஆரம்பித்தது. நான் அப்போது அந்த தவறை செய்தேன்.

அவளின் இரவு உடையை கீழிருந்து மேலாக முழுதும் உயர்த்தத் தொடங்கினேன். அவள் என்னை பார்த்து திரும்பி முழுதும் என்னை மறைத்திருந்தாள். நான் படுத்துக்கொண்டிருந்த அமைப்பில் அவள் உடல் மட்டுமே தெரிந்தது. இடுப்புக்கு மேல் நான் உடையை உயர்த்திய அந்த தருணத்தில் அவள் இயல்பாக திரும்பி அவள் தம்பியின் பக்கம் பார்க்க....................

படாரென்று அவள் தன் உடைகளை கீழே இறக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்தாள். நான் என்ன நடந்தது என்று புரியாமல் இயல்பாய் அவள் தம்பியை பார்க்க அவன் தன் கண்களை கைகளால் மறைத்து உறங்கிக்கொண்டிருந்தான். ஆனால் என் மனைவியின் பார்வையோ ஒருவித கோபமும், அழுகையும் கலந்ததாய் இருந்தது. இந்த நொடியிலும்கூட அந்த பார்வை எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அவள் எந்த கேள்வியும் கேட்காமல், ஒரு வார்த்தையும் பேசாமல் எழுந்து பால்கனிக்கு போய்விட்டாள். நிலைமையை யூகித்து உணர்ந்து நான் படுக்கையறை விட்டு வெளியில் வந்து அதை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அவளருகில் சென்றேன். அவள் அந்த நொடியிலிருந்து அழுதுகொண்டுதான் இருக்கிறாள்.

"அவன் பார்த்துட்டான் மாமா நீ டிரெஸ்ஸ தூக்குனத.."

"இல்லம்மா..நான் பார்த்தப்போ அவன் தூங்கிட்டுதாம்மா இருந்தான்.."

"இல்ல இல்ல..நான் பார்த்தேன். அவன் கண்ணு தொரந்துதான் இருந்துச்சு.."

"இல்லம்மா...அப்படில்லாம் இல்ல...அவன் பார்த்திருக்க வாய்ப்பே இல்ல.."

" அவனும் வயசுப் பையன்தானே? அவன் நம்மளப் பத்தி என்ன நெனப்பான்?" என்று ஓங்கி அழுதாள். நான் அவசரமாக அவளை அணைத்து ஒலியின் அளவைக் குறைத்தேன்.

"தம்பிதானம்மா! அதெல்லாம் ஒண்ணுமில்ல..ஐயோ கடவுளே.."

அதன் பின்னர் வந்த அரைமணி நேரமும் அவள் நினைத்து நினைத்து அழுவதும் நான் ஆறுதல் கூறுவதுமாக நகர்ந்துகொண்டே இருந்தது. இதோ இப்போதுதான் முதல்முறையாக,"அவன் பார்த்திருக்க மாட்டான்ல?" என்கிற வார்த்தையை உபயோகித்திருக்கிறாள். இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காது அவளை சமாதானப்படுத்த...

இன்றைய இரவு விடிய இன்னும் நீண்ட நேரம் இருக்கிறது.

No comments:

Post a Comment