Sunday 14 July 2013

Story-38 உயிர்



                                                                        உயிர்
-ரா. சுஜாதா சுஜித்குமார் 

யாரோ அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு ஜெயக்குமார் பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்தான். வாசலுக்கு சென்று கதவை திறந்தவன் அங்கு இருவர் நின்றிருந்ததைக் கண்டான். அவர்கள் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து வந்ததாகவும், அவரின் மனைவி சுதா இறந்துவிட்டதால் அவள் பெயரில் எடுத்திருந்த காப்பீட்டுத் தொகை ரூபாய் ஐந்து லட்சம் பெற்றுத் தருவதற்காக அவரிடம் ஒரு சில கையெழுத்தைப் பெற வந்ததாகவும் கூறினார். அந்த படிவத்தில் கையெழுத்தைப் போட்டு அவர்களை அனுப்பிவைத்தவன் சற்றே மிரட்சி அடைந்தான். ஆம் அவனால் இரண்டு நாட்களுக்கு முன் அவன் பெயருக்கு சுதா பணியிலிருந்தபோது தொழிலாளர் வைப்பு நிதியில் போட்டிருந்த இரண்டு லட்ச்சத்து சொச்ச ரூபாய்க்கான காசோலை கிடைத்த பிரமிப்பிலிருந்தே மீள முடியவில்லை, அதற்குள்ளாக காப்பீட்டுத் தொகை வேறு.

அவன் கண்கள் தாமாகவே கண்ணீர் நிரம்பி குளமாகியது அவனின் இழிவான செயலை நினைத்து. அப்போது அவன் வாலிப வயதிலிருந்தான். அப்போது அவன் மனைவியை துளியும் மதித்ததில்லை அவனின் பிள்ளைகளையும் அவர்களின் உணர்வுகளையும் கூட உணர்வுப்பூர்வமாய் அவன் என்றும் உணர்ந்ததில்லை. ஜெயக்குமார் அவனது பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை. அவனின் சாதாரண ஆசாபாசங்களைக்கூட வெளிப்படுத்தியதில்லை தன் மனைவி மக்களிடம். எங்கே தன் பெற்றோர்கள் இதனால் பாதிக்கப்படுவார்களோ, தங்களின் பாசத்தை மகன் மறந்து விட்டானே என்று நினைப்பார்களோ என்ற தவறான எண்ணத்தால் அவனால் மனைவி மற்றும் பிள்ளைகளோடு ஒட்டவே இயலவில்லை. அவனின் அந்த தவறான எண்ணமே அவனை அவனின் குடும்பத்திலிருந்து பிரிக்கப்போவதை அறியாமல். பாவம் சுதா நாளுக்கு நாள் அவளுக்கு ஜெயக்குமாரிடமிருந்த எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆனால் தொடர்ந்து ஜெயக்குமார் அவளை அலட்சியப்படுத்திக்கொண்டே இருந்தான்.

அந்த சமயத்தில் அவன் ஒரு லட்ச ரூபாய்க்கான காப்பீடு போட்டிருந்தான். அதற்கு அவனின் தாயாரை வாரிசுதாரராக நியமித்திருந்தான். அது தெரிந்ததும் சுதா அவனிடம் சண்டை போட்டாள் பணம் பறிபோய் விடுமே என்றல்ல. அவளிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல், அவளை தன் மனைவி என்ற அந்தஸ்த்தைத் தராமல் தன்னை தன் கணவன் அவமதித்து விட்டதாக அவள் நினைத்தாள். அது ஓரளவிற்கு உண்மையும்கூட. ஜெயக்குமாரோ "எனக்கு என்னோட அம்மா அப்பா தான் எல்லாமே அவங்களுக்குப் பிறகுதான் மற்றவர்கள் என்று கூறி பெற்றோரைப் பூரிப்படையச் செய்தான். இந்த உதாசீனம் சுதாவின் மனதை மிகவும் பாதிப்படைச் செய்தது. அன்று அவனை விட்டுச் சென்றவள்தான் .

நாட்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் கால ஓட்டத்தில் மிக வேகமாக சுழல பிள்ளைகள் கண்ணும் கருத்துமாக சுதாவால் நன்முறையில் வளர்க்கப்பட்டு நல்ல நிலைக்கும் வந்தார்கள். சுதாவும் இறப்பதற்குச் சற்று முன் வரையிலும் உழைத்துக்கொண்டே போய் சேர்ந்தும் விட்டாள்.

இதோ இன்று அவள் உடலளவில் இறந்து அவனுக்குப் பாடம் புகட்டியிருந்தாள். அவளின் அனைத்து சேமிப்புகளுக்கும் பிள்ளைகளை வாரிசாக்காமல் அவனை வாரிசாக்கி இருக்கிறாள். ஜெயக்குமார் உயிரிருந்தும் உயிரற்றவனாய், புகைப்படத்திலிருந்த சுதாவோ சிரித்தபடி உயிரின்றி உயிராய்.

3 comments:

  1. வெரி டச்சிங்க் ..நேர்த்தியான கதை

    ReplyDelete